உங்கள் வீடுகளை அலங்கரிக்க இனி கடைகளுக்குச் சென்று அழகுப் பொருட்களை வாங்க வேண்டாம். நீங்களே அழகான தொங்கும் பறவைகள் செய்து வீடுகளில் தொங்க விட்டு அனைவரையும் அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
தடிமனான வெள்ளைக் காகிதம், பொட்டு
வெள்ளைக் காகிதத் துண்டுகள், மெல்லிய மூங்கில்
பென்சில், குச்சிகள், கத்தரிக்கோல், கறுப்பு ஸ்டிக்கர்
பசை, வெண்மையான பிளாஸ்டிக் பந்து
நூல்
தடிமனான வெள்ளைக் காகிதத்தை மடித்து, அரைவட்டம் வரையுங்கள். அதை கத்தரிக்கோலினால் கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சிறிய அரை வட்டம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். பிறகு படத்தில் காட்டியபடி அவ்விரண்டையும் கொண்டு கூம்பு வடிவத்தில் புனல்கள் செய்து, விளிம்புகளைப் பசையால் ஒட்டுங்கள் அதை சற்று நேரம் உலர விடுங்கள்.
இப்போது படத்தில் உள்ளது போல பிளாஸ்டிக் பந்தை கூம்பின் வாய்ப்புறத்தில் வைத்து ஒட்டுங்கள். செய்து வைத்திருக்கும் சிறிய புனலை எடுத்து பந்தின் மீது ஒட்டுங்கள். இது தான் பறவையின் அலகு. இதே போல கறுப்பு ஸ்டிக்கர் பொட்டுக்களை எடுத்து கண்கள் போல தோற்றமளிக்கும் படி ஒட்டுங்கள்.
எஞ்சியுள்ள காகிதத்தில் இரண்டு சிறகுகளை படத்தில் காட்டியுள்ளபடி வரைந்து அவற்றை அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூன்று நீளமான காகிதத் துண்டுகளை படத்தில் காட்டியபடி சுருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை பறவையின் வால் போல தோற்றமளிக்கும் படி ஒட்டிக் கொள்ளுங்கள். சிறகுகளையும் இருபுறமும் ஒட்டிக் கொள்ளுங்கள்.
மூங்கில் குச்சியை அரை வட்டமாக வளைத்து, மற்றொரு மூங்கில் குச்சியுடன் நூலைக் கொண்டு படத்தில் உள்ளது போல இணைத்து விடுங்கள் (குச்சியை வளைத்து கட்டுவது சிரமமாக இருந்தால் விட்டு விடுங்கள். அடிப்பாகத்துக்கு மட்டும் ஒரு குச்சியை பயன்படுத்தலாம்). அதன் மீது வெள்ளைக் காகிதத்தை பசை தடவி ஒட்டுங்கள். பின்னர் அந்தக் குச்சியின் மீது குருவியை பசை தடவி ஒட்டி விடுங்கள். குச்சியின் மேல் பகுதியில் நூல் கட்டி தொங்க விடுங்கள்.
அழகான, அலங்கார குருவி தயார்! உங்கள் வீட்டில் தொங்க விட்டு நண்பர்களை அசத்துங்கள்.
No comments:
Post a Comment