Sunday, May 30, 2010

தமிழ் செம்மொழி மாநாடு பாடல் வீடியோ



ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்!



இசை - . . ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு. கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.



Thursday, May 27, 2010

உறக்கம்


இரண்டு குழந்தைகள் - II


இடுப்புக்
குழந்தையும்தாயுமாய் அவளை இங்கேவிட்டு விட்டு, ஏதாவதுவேலை தேடி வருவதாகச்சொல்லி, வடக்குச்சீமைக்குப் போன அவள்புருஷன் கருப்பையாத்தேவனின் முகதரிசனம்ஆறு மாசமாகியும்கிடைக்கவில்லை.

அன்று ஐயரவர்களுக்கு பிறந்த தின வைபவம். வீட்டில் விசேஷமானதால் விருந்தினர்களும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் பந்தி நடந்ததால் சிவப்பி கஞ்சிக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது.

பிள்ளை பசியால் துடித்தான்.

அவனுக்கு 'பராக்கு'க் காட்டிப் பேசிச் சிரித்து விளையாடியவாறு கொட்டகையின் ஓரத்திலிருந்த மர நிழலில் குந்தியிருந்தாள் சிவப்பி.

"ஒங் ஐயா எங்கலே...." என்று மகனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் சிவப்பி.

"ஐயா...ஓ....போயித்தாரு..."

"எப்பலே வரும் ஒங்க ஐயா..." என்றதும் அவன் அவள் மடியிலிருந்து இறங்கி நடந்து, தெருவில் போய் நின்று இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வந்தான்.

"ஆத்தா...ஐயா....ஊம்" என்று இரண்டு கையையும் விரித்தான். அவன் முகத்தில் ஏமாற்றமும் சோர்வும் படர்ந்திருந்தது.

"ஐயா நாளைக்கு வந்துடும். வாரப்போ ஒனக்கு முட்டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்லாம் கொண்ணாந்து குடுத்து...அப்புறம் நாம்ப நம்ம ஊருக்குப் போயி, நம்ம ஊட்லே இருக்கலாம்...." என்று கூறும்போது அவள் குரல் தழுதழுத்தது; கண்களில் நீர் துளிர்த்தது. மகனின் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவன் முகத்திலேயே கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.

இந்த சமயத்தில் ஐயர் வீட்டு வாசலில் இலை வந்து விழும் சப்தம் கேட்டது----

"ஆத்தா...கஞ்சி....கஞ்சி..." என்று குழந்தை பறந்தான்.

மகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கையில் தகரக் குவளையுடன் போய் நின்றாள் சிவப்பி.

சுப்பு ஐயர் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்து, திண்ணைக்கருகே ஈஸிசேரில் வந்து சாய்ந்து ஏப்பம் விட்டார்.

"என்ன சேப்பி?..."

"இன்னக்கி விசேஸங்களா சாமி?"

---அவள் சாதாரணமாய், உபசாரத்திற்குத்தான் கேட்டு வைத்தாள்.

"என்னத்தெ விசேஷம் போ....ஊர்லேந்து பொண்ணு வந்திருக்காளோன்னா?... அதான்...ஹி...ஹி...."

---இவளுக்கு ஏதாவது தரவேண்டி இருக்குமோ என்ற பயத்தில் பூசி மழுப்பினார் ஐயர்.

உள்ளேயிருந்து அம்மாளின் குரல் மட்டும் கேட்டது.

"யாரது சேப்பியா....?"

"ஆமாங்க."

"சித்தெ சந்துவழியா கொல்லப்புறம் வாயேண்டி....ஒன்னத்தான் நெனச்சிண்டே இருந்தேன். தொட்டியிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்பிட்டவாளுக்குக் கையலம்பக்கூட ஜலம் இல்லே....சீக்கிரம் வா...." என்று அம்மாவின் குரல் ஒலித்ததும் இடுப்பிலிருந்த குழந்தையுடன் உள்ளே போகும் சிவப்பியைப் பார்த்து,

"இடுப்பைவிட்டு எறங்காமே ஒன் உசிரை வாங்கறதே, சனி அத்தெ எறக்கி விட்டுட்டுப் போ'..." என்றார் ஐயர்.

குழந்தையை இறக்கி மர நிழலில் உட்கார வைத்து "ஆத்தா போயி கொஞ்சம் தண்ணி எறைச்சி ஊத்திட்டு வாரேன்; அழுவாமே குந்தி இருக்கியா, ஐயா?..." என்று அவனை முத்தம் கொஞ்சினாள் சிவப்பி.

'சரி' என்று சமர்த்தாகத் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டான் சிறுவன்.

சந்துப் பக்கம் போகும் போது சிவப்பி திரும்பித் திரும்பித் தன் மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றாள். அவனும் சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான்.

பையன் அழாமல் அடம் பிடிக்காமல் இருந்ததில் ஐயருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்; ஆத்திரம் என்று கூடச் சொல்லலாம்.

உள்ளேயிருந்து ஆரோகண அவரோகண கதிகளிலெல்லாம் குரலை முழக்கிக் கொண்டு வந்தான் அவர் மகள் வயிற்றுப் பேரன். அவனுக்கும் வயது நான்குதான் இருக்கும். நான்கு விரலையும் வாய்க்குள் திணித்தவாறு சிணுங்கிக் கொண்டே அவருகே வந்தான் பேரன்.

"ஏண்டா கண்ணா அழறே? இப்படி வா...மடியிலே வந்து தாச்சிக்கோ" என்று பேரனை அழைத்தார்.

"மாத்தேன் போ....அம்மா...ஆ...ஆ" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்பித்தான் குழந்தை.

"அம்மா சாப்பிடறாடா கண்ணா...சாப்டுட்டு வந்து ஒன்னெத் தூக்கிண்டுடுவா. சமத்தோன்னோ?....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ?" என்று சோணையாவைக் காட்டினார் ஐயர்.

சோணையா கையைத் தட்டிக்கொண்டு ஐயரின் பேரனைப் பார்த்துச் சிரித்தான்; அவனோ காலை உதைத்துக் கொண்டு அழுதான்'

---தனது பேரனுக்கு அவனை வேடிக்கை காட்டப்போய், தன் பேரன் அவனுக்கு வேடிக்கையாகிப் போனானே என்ற ஊமை ஆத்திரம் ஐயருக்கு...

"ஏண்டா சிரிக்கிறே? அப்படியே போட்டேன்னா..." என்று விளையாட்டாய்க் கண்டித்து தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார் ஐயர். "அந்தப் பையன்தான் அசடு....அவனை நன்னா அடிப்போமா?"

---அவர் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கத்தினான் பேரன்.

"இதெவிட அசடு லோகத்திலே உண்டோ.... நன்னா ஒதைக்கணும்" என்று கருவிக்கொண்டே ஐயரின் மகள் எச்சில் இலையுடன் தெருப்பக்கம் வந்தாள். இலையைப் போட்டுக் கையைக் கழுவிய பின்,

"சனியனே, கத்திப் பிராணனைத் தொலைக்காதே' " என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள்.

"என்னடி பொண்ணே, ஒன்னும் சாப்பிடாம இலையைக் கொண்டு வந்து எறிஞ்சிருக்கே... எல்லாம் அப்படியே இருக்கு ...ஜாங்கிரிகூடன்னா அப்படியே கெடக்கு? இப்படி 'வேஸ்ட்' பண்ணுவாளோ?..." என்று அரற்றினார் ஐயர்.

"இந்த சனி என்னெ சாப்பிட விட்டாத்தானே...?"

"சரி...அவனெக் கத்த விடாதே' அவனுக்கு ஒரு ஜாங்கிரி குடு" என்று சொல்லிவிட்டு சோணையாவைப் பார்த்தார்.

"ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா?" என்றார் கண்களைச் சிமிட்டிக் கொண்டே.

---பையனுக்கு புரியவில்லை.

"மிட்டாயிடா...மிட்டாய், வேணுமா?"

மிட்டாயி என்றதும் பையனுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து வந்தான்.

"அதோ, அதான்...மிட்டாயிடா... எடுத்துத் தின்னு பாரு, இனிக்கும்...." என்று நாக்கைச் சப்புக்கொட்டி ஆசை மூட்டி எச்சில் இலையைக் காட்டினார் ஐயர்.

சோணையா தனது பிஞ்சுக் கரங்களால் எச்சிலையில் கிடக்கும் துண்டு ஜாங்கிரியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்....

"எலே...எலே...போடுலே கீளே----தூ...." என்று கூவியவாறு சந்திலிருந்து ஓடிவந்த சிவப்பி அவன் கையிலிருந்த ஜாங்கிரியைத் தட்டிவிட்டாள். "துப்புலே.... துப்பு..." என்று அவன் தலையில் 'நறுக்' கென்று குட்டினாள். சோணையா அழுதான்; அவன் பிளந்த வாய்க்குள் விரலைவிட்டு அந்த ஜாங்கிரித் துண்டை வழித்து எறிந்தாள்.

"நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்தறேன்....எச்சப் பொறுக்கறியா?..." என்று முதுகில் அறைந்தாள்.

"கொழந்தேயெ அடிக்காதே சேப்பி..." என்றார் ஐயர்.

"இல்லே சாமி...நாங்க இல்லாத ஏளைங்க....இப்பவே கண்டிக்காட்டி நாளைக்கி எச்சிக்கலை பொறுக்கியாவே ஆயிடும்..." என்று சொல்லிவிட்டு இடுப்பில் இருக்கும் சோணையாவின் முகத்தைத் துடைத்து "இனிமே எச்சியெல்லாம் எடுக்காதே' " என்று சமாதானமாய்க் கேட்டாள்.

பையன் விம்மிக் கொண்டே ஐயரைக் காட்டி, "சாமி....சாமிதான் எடுத்துத் திங்கச் சொல்லிச்சு..." என்று அழுதான். சிவப்பிக்கு உடம்பு பதைத்தது, கண்கள் சிவக்க ஐயரைப் பார்த்தாள்.

"ஏன் சாமி...ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவீங்களா?... ஒங்க எச்சி ஒஸத்தியா இருந்தா ஒங்களோட, எம் பையனுக்கு ஏன் அதைத் தரணும்..." என்று கோபமாய்க் கேட்டாள்.

"என்னடி அது சத்தம்?" என்று கேட்டுக் கொண்டே பாத்திரத்தில் கஞ்சிக் கொண்டு வந்தாள் வீட்டு அம்மாள்.

"நீயே பாரும்மா...எம்மூட்டப் புள்ளைக்கி எச்சிலைத் திங்கப் பளக்கிக் கொடுக்கிறாரும்மா, சாமி..." என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சிவப்பி.

"நான் என்ன பண்ணுவேண்டி...நேக்கு அவர் ஒரு பச்சைக் கொழந்தை...ஒன் கொழந்தையை நீ அடிக்கறே; நா என்ன பண்றது, சொல்லு?"

"ஏண்டி சேப்பி, நான்தான் அவனை எடுத்துத் திங்கச் சொன்னேன்னு சொல்றயே, நான் சொன்னதை நீ கண்டையா?...." என்று எழுந்து வந்தார் ஐயர்.

"எம்மவன் வறவனுக்கு பொறந்தவன். பொய் சொல்ல மாட்டான் சாமி..." ஆக்ரோஷத்தோடு இரைந்தாள் சிவப்பி.

ஐயர் அசந்து போனார்'

"ஆமா; சொன்னேன்னுதான் வச்சுக்கோயேன்...எங்க வீட்டுக் கஞ்சியெ தெனம் குடிக்கறயே, அது மட்டும் எச்சல் இல்லியா?... அதுவும் எச்சல்தான் தெரிஞ்சுக்கோ..." என்று பதிலுக்கு இரைந்தார் ஐயர்.

"இந்தாங்க சாமி...ஒங்க எச்சிக் கஞ்சி' நீங்களே தான் குடிச்சிக்குங்க... இந்த எச்சில் எனக்கு வாணாம்..." என்று தகரக் குவளையைத் 'தடா'லெனச் சாய்த்துவிட்டு, மகனைத் தூக்கி இடுப்பில் பொத்தென இருத்திக்கொண்டு வேகமாய் நடந்தாள் சிவப்பி; இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து மனம் பொறுக்காமல் "எல்லாம் என் கர்மம், என் கர்மம்' " என்று தலையிலடித்துக் கொண்டு உள்ளே போனாள் ஐயரின் மனைவி.

உள்ளே தோட்டத்தில் தொட்டி நிறைய---சிவப்பியின் உழைப்பால் நிறைந்திருந்த--- தண்ணீரையும் பாத்திரம் நிறைய அவளுக்காக எடுத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் பார்த்த அம்மாளுக்குக் கண்கள் கலங்கிப் போயின.

"அடியே...பாத்தையோ, நம்மாத்துக் கஞ்சியெக் குடிச்சு வந்த கொழுப்புடீ... இனிமே அவளுக்கு கஞ்சி ஊத்தப் படாது சொல்லிட்டேன்... நாளையிலேருந்து சாத்தெ வடிக்காதே.... பொங்கிப்பிடு.... அதிலேதான், சத்து இருக்கு..." என்ற ஐயரின் வழக்கமான பல்லவி திண்ணையிலிருந்து சற்றுக் கண்டிப்பான குரலில் ஒலித்தது.

மறுநாள் ஐயர் வீட்டில் சோற்றை வடித்தார்களோ, பொங்கினார்களோ,.... ஆனால், வழக்கமாகக் கஞ்சி வாங்க வரும் சிவப்பியை மட்டும் மறுநாள்... மறுநாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்தத் தெருவில் காணவில்லை.

முற்றும்.

இரண்டு குழந்தைகள் - I


இரண்டு குழந்தைகள்

எழுத்து - ஜெயகாந்தன்

இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில் மாடுகள், பசுக்கள் வசித்தன. சில கொட்டகைகளில் கார்கள் இருந்தன.

சேதன அசேதனப் பொருட்கள் யாவற்றுக்கும் இடம் கொடுத்த அந்தத் தெரு சிவப்பிக்கும் அவள் மகன் சோணையாவுக்கும் இடம் தந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியுமா?....

முதலில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலிருந்தும் அவளையும் அவள் குழந்தையையும் விரட்டினார்கள். பிறகு அந்த ரிட்டையர்ட் சப்ரிஜிஸ்திரார் சுப்புஐயரின் மனையாள் தயவின் பேரில், அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகையில் இடம் பிடித்தாள் சிவப்பி.

மழையென்றும் குளிரென்றும் இயற்கை தொடுக்கும் தாக்குதல்களுக்கு அரணாய் அமைந்தது அந்தக் கொட்டகை. தினசரி அந்த மாட்டுக்கொட்டகையை அவள் சுத்தம்செய்வாள். அவள் படுத்துக்கொள்ளும் இடத்தை அவள் சுத்தம் செய்து கொள்ளுகிறாள். அதற்குக் காசு கொடுப்பார்களா, என்ன?....

பகல் பொழுதெல்லாம் இடுப்பில் பிள்ளைச் சுமையுடன், அந்தத் தெருவின் கோடியில் உள்ள விறகுக் கடையில் அவளைப் பார்க்கலாம். விறகுச் சுமை கிடைத்துவிட்டால், பிள்ளைச்சுமை இறங்கிவிடும். அவன் கையில் காலணாவுக்கு முறுக்கை வாங்கிக் கொடுத்து அங்கேயே மரத்தடியில் குந்தி இருக்கச் சொல்லிவிட்டு ஓடுவாள். பிள்ளையை விட்டுவிட்டுப் போகும் துடிப்பில், சுமையுடன் ஓட்டமாய் ஓடி ஒரு நொடியில் திருப்புவாள். சோணையாவும் புத்திசாலித்தனமாய், அம்மா வரும் வழியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். அதுவரை முறுக்கைக் கடிக்கவேமாட்டான். தாயைக்கண்டதும் ஒரு சிரிப்பு மலரும். அவளும் ஓடி வந்து பிள்ளையைத் தூக்கி முத்தமிடுவாள். தாயுள்ளம் அந்தப் பிரிவைக் கூடத் தாங்க முடியாதது என்பது அவள் தவிப்பில் தெரியும். கையிலுள்ள முறுக்கைத் தாயின் வாயில் வைப்பான் சிறுவன். அவள் கொஞ்சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, "நீ தின்னுடா ஐயா...." என்று சொன்ன பிறகு தான் தின்பான்.

விறகுச் சுமை இல்லாத நேரங்களில் கடைத்தெருவில் சென்று கடைகளில் தானியம் புடைப்பாள்.

மாலை நேரத்தில் அந்தப் பெரிய தெருவின் ஒரு மூலையில், மரத்தடியில் மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டிச் சோறு சமைத்துத் தானும் தன் மகனும் உண்டபின் மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் நித்திரை கொள்வாள்.

அந்தத் தெருவில் எல்லா வீட்டுக்கும் அவள் வேலை செய்வாள். அதிலும் சுப்பு ஐயர் வீட்டுக்காரர்களுக்கு அவளிடம் தனிச்சலுகை. அவளும் மற்ற வீட்டுக்காரர்களிடம் செய்யும் வேலைக்குக் கூலியாகக் காசு பெறுவது உண்டு. சுப்பு ஐயர் வீட்டில்...எப்பொழுதாவது அவர் மனைவி கொடுத்தாலும்கூட வாங்குவதில்லை. அவள் செய்யும் வேலைகளுக்காக மீந்துபோன சோறு, கறி குழம்பு வகையறாக்கள் அவளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்டில் அவளாகக் கேட்டு வாங்குவது, மத்தியான நேரத்தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்டும்தான்.

அந்தக் கஞ்சியில் அவளுக்கு அபரிமிதமான சுவை. சுப்பு ஐயர் வீட்டுக்குக் கிராமத்தில் இருந்து நெல் வருகிறது. நல்ல வீட்டு அரிசி; பச்சரிசிக் கஞ்சி மணக்கும்; அவளுக்குக் குடிக்க குடிக்க அது இனிக்கும். எந்த வேலை எப்படிப் போனாலும் பத்து பதினோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்படியில் தகரக் குவளையும் கையுமாய் வந்து நின்று விடுவாள்.

சுப்பு ஐயர் திண்ணையருகே ஈஸிச்சேரில் சாய்ந்திருக்கிறார். கையிலுள்ள விசிறி லேசாக அசைகிறது.

திண்ணையில் தகரக் குவளையின் சப்தம் கேட்கவே ஐயர் நிமிர்ந்து பார்க்கிறார்.

"அடியே...ஒன் ஸ்வீகாரம் வந்திருக்கா; பாரு"

சுப்புஐயருக்கு சிவப்பியைப் பார்த்தால் கொஞ்சமும் பிடிக்காது. மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பதே அதற்குக் காரணம். தனது வெறுப்பை எப்படியெப்படி யெல்லாமோ காட்டிக் கொள்வார்.

"என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ? இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு...." என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள்.

அதற்குள் சுப்பு ஐயரின் மனைவி உள்ளே இருந்து கஞ்சியில் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டே வந்தாள். திண்ணையோரமாய் ஒதுங்கி, எட்டி நின்றவாறே புடவையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சிவப்பி கையிலேந்தி நிற்கும் தகரக் குவளையில் அவள் கஞ்சியை வார்க்கும்போது, ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தார்.

கஞ்சியிலிருந்து ஒரு பருக்கை விழுவது தெரிந்ததோ, போச்சு, அவ்வளவுதான்'.... ஐயர் வீட்டு அம்மாள் இருந்த இருப்பும், இந்தக் கஞ்சித்தண்ணிக்குக்கூட வக்கில்லாமல் அவள் அப்பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்பரையாகக் குலமுறை கிளர்த்த ஆரம்பித்துவிடுவார்.

"என்னடி அது 'லொடக்'னு கொட்டித்தே?..." என்று புருவத்தை உயர்த்தினார்.

அம்மாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

"காட்டுடீ...ஐயர்கிட்டே கொண்டுபோய்க் காட்டு. கையைவிட்டுத் துழாவிப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்தெல்லாம் கொண்டுபோய்க் கொட்டிட்டேனேன்னோ.... இவர் துப்புக் கண்டுபிடிக்கிறார்...." என்று இரைந்துவிட்டு உள்ளே போனாள்.

"ஒண்ணுமில்லே சாமி....வெறும் கஞ்சி ஆடை" என்று அதை விரலால் எடுத்துக் காட்டி தூக்கி எறிந்தாள் சிவப்பி.

"அடி அசடே....அதை எறிஞ்சுட்டியே...அதிலேதான் 'வைடமின் பி' இருக்கு."

"எனக்கு அதொண்ணும் வாணாம் சாமி...." என்று கஞ்சிக் குவளையுடன் நகர்ந்தாள் சிவப்பி.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐயர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:

"ஹ்ம்...கஞ்சித் தண்ணியைக் குடிச்சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு" என்று முணகியபின், உரத்த குரலில்....

"அடியே...இனிமே சோத்தெ வடிக்காதே. பொங்கிப்பிடு. அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு. ஒடம்புக்கு ரொம்ப நல்லது...." என்று சொன்னார்.

"ஆமா...இப்போ இருக்கற சத்தே போறும்" என்று சலித்துக்கொண்டு உள்ளே போனாள் அம்மாள்.

அம்மாள் எத்தனை தடவைகள் சலித்துக் கொண்டாலும், ஐயருக்கு சிவப்பியைப் பார்க்கும் போதெல்லாம் --- லோகத்தில் இருக்கும் சத்தெல்லாம் தன் வீட்டுக் கஞ்சித் தண்ணீரில் தான் இருப்பதாகத் தோன்றும்.

ராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து "பஞ்சம் பிழைப்ப"தற்காக மதுரை வந்தவள் சிவப்பி.

பெயரளவில் சிவப்பி. கரிய ஆகிருதி...ஆரோக்கியமும் திடமான உடற்கட்டும் உடைய அவள் பஞ்சத்திலடிபட்டு இந்த நகரத்திற்கு வந்தவள்தான் என்றாலும், இங்குள்ளவர்கள் கண்டு வியக்கும்படிதான் இருந்தது அவள் உடல் வனப்பு. செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும்'

ஆனால் இப்போது....

முறம் கொண்டு தானியங்கள் புடைப்பதும், கூலிக்கு விறகு சுமப்பதுமாய் உழைத்துத் தானும் ---- கருப்பையாத்தேவனின் வாரிசாக திகழ்ந்து, தன் சிரிப்பிலும் புன்னகையிலும் அவள் கணவனின் சாயல் காட்டி, ஆறுதல் தரும் நான்கு வயது மகனான --- சோணையாவும் வயிறு வளர்ப்பது தான் அந்த மறத்தியின் உடல் வலு புரியும் மகத்தான சாதனை.


(தொடரும்)......

குறைப் பிறவி - ஜெயகாந்தன் - II


முதல் நாள் அவள்வேலைக்குப்போகும்பொழுது ராஜாராமன்வீட்டில் இல்லை. பங்கஜம்மட்டுமே இருந்தாள். அவளே சம்பளம், வேலைநேரம் எல்லாம் பேசினாள்.

பங்கஜம் சொன்னது எதுவும் செல்லியின் காதுகளில் விழவில்லை. பங்கஜத்தின் மடியில் உட்கார்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கன்னங்கள் குழியச் சிரித்து வரவேற்ற அந்தக் குழந்தையிடம் லயித்தவாறே, அவள் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டினாள் செல்லி.

குழந்தை செல்லியிடம் தாவினான்.

செல்லி குழந்தையை வாங்கி அணைத்துக் கொண்டாள்.

இத்தனை நேரம் குழந்தையைத் தூக்கி வைத்திருந்ததனால் களைத்துப்போன பங்கஜம், அறைக்குள் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

செல்லி பாலுவைத் தூக்கி கொண்டு தோட்டமெல்லாம், வீடெல்லாம் சுற்றித் திரிந்து மகிழ்ந்தாள். பொம்மைகளையும், சொப்புகளையும் வைத்துக்கொண்டு குழந்தையோடு விளையாடினாள்.

குழந்தைக்குச் சோறூட்டும்போதும் காலில் கிடத்தித் தாலாட்டும்போதும் அந்தக் குறைப் பிறவிக்கும் கூட நெஞ்சில் நிறைவு பிறந்தது.

அன்று மத்தியானம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை 'ஆயா' என்று அழைத்துக் கொண்டே விழித்தான்.

கூடத்துத் தூண் ஓரத்தில் கவிழ்ந்த பார்வையுடன் குந்தி உறங்கிக் கொண்டிருந்த செல்லி, தலை நிமிர்ந்து பார்த்தாள். தொட்டிலின் விளிம்பைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தலையை மட்டும் வௌியே நீட்டி அவளைக் கூப்பிட்டுச் சிரித்த குழந்தையின் தோற்றம் அவளை உள்ளும் புறமும் சிலிர்க்க வைத்தது. ஓடிவந்து குழந்தையைக் கைநிறைய வாரிக் கொண்டாள். குழந்தையை மடிமீது இருத்திக் கொஞ்சினாள்.

காலமெல்லாம், ஆயுள் முழுவதும் இப்படியே ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே கழித்துவிட்டால்?...

அந்த பாக்கியம் யாருக்குக் கிட்டும்? செல்லிக்குக் கிட்டும்'

பாலு அவன் மடிமீது கிடந்தே வளர்வான்; பள்ளிக்கூடம் போய் வருவான்; பிறகு பெரியவனாகி ஆபீசுக்குப் போவான்....அப்புறம் கலியாணமாகி, அவனும் ஒரு குழந்தையைப் பெற்று அவள் மடிமீது தவழவிடுவான்....

ஒரு தாய்க்கே உரிய அர்த்தமற்ற சிந்தனைகளில் அவன் மகிழ்ந்து கொண்டிருந்தாள். கூடத்துச் சுவரிலிருந்த ஒரு போட்டோ அவள் கண்ணில் பட்டது.

"பாலு...அதாரு....?" என்று போட்டோவைக் காட்டினாள் செல்லி.

"அம்மா அப்பா...." கைகளைத் தட்டிக் கொண்டு உற்சாகமாகக் கூவினான் பாலு.

"அம்மா மூஞ்சி எப்படியிருக்கு?" என்றாள் செல்லி.

பையன் முகத்தைச் சுளித்துக்கொண்டு மூக்கை உறிஞ்சிக் காட்டினான்.

"போதும் போதும்..." என்று சொல்லி சிரித்தாள் செல்லி. குழந்தையும் சிரித்தான்'

"அப்பா மூஞ்சி எப்படியிருக்கு?..."

மறுபடியும் முகத்தைச் சுளித்து மூக்கை உறிஞ்சி...

செல்லி சிரித்தாள்' குழந்தையும்தான்.

"பாலு மூஞ்சி எப்படியிருக்கு?"

கண்களை அகலத் திறந்து முகம் முழுதும் விகசிக்கப் புன்முறுவல் காட்டினான் குழந்தை.

"என் ராஜா' " என்று குழந்தையை அணைத்துக் கொண்டாள் செல்லி.

"ஆயா மூஞ்சி...."

முகம் விகசிக்கக் கண்கள் மலரச் சிரித்துக் கொண்டே செல்லியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் குழந்தை.

அப்பொழுதுதான் ஆபீசிலிருந்து வந்த ராஜாராமன் அவர்களின் பின்னால் வந்து நின்று புது 'ஆயா' வும் குழந்தையும் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தான்.

குழந்தையின் முத்தத்தை ஏற்றுக் கொண்டவுடன், ஏற்றுப் பிறந்த சாபமே தீர்ந்ததுபோல் அவள் தேகாந்தமும் புளகமுற்றது. குழந்தையை முகத்தோடு அணைத்து முத்தமிட்டாள் செல்லி.

ராஜாராமன் அப்பொழுதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். அவன் முகம் அருவருப்பால் நௌிந்தது; மனம் குமட்டியது. தனது அழகுச் செல்லம் இந்த அசிங்கத்தின் மடியில் அமர்ந்து...

அவன் கண்கள் இறுக மூடிக்கொண்டு திரும்பி விட்டான். அப்பொழுதுதான் அவள் அவனைப் பார்த்தாள்.

ராஜாராமன் விடுவிடென்று தன் மனைவியின் அறைக்குச் சென்றான். குழந்தையின் தொந்தரவோ, அழுகைக் குரலோ இல்லாததால் பங்கஜம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

"இந்த கோர சொரூபத்தை யாரு பிடிச்சிட்டு வந்தது?" என்று இரைந்தான் ராஜாராமன். பங்கஜம் திடுக்கிட்டு எழுந்தாள்.

"யாரைச் சொல்றீங்க?"

"குழந்தையைப் பாத்துக்க இந்தக் குட்டிச்சாத்தான் தானா கிடைச்சுது?"

"யாரு, ஆயாவைச் சொல்றீங்களா?"

"ஆமா.....ஆயாவாம் ஆயா....கர்மம், கர்மம்.....பாக்கச் சகிக்கல்லே' கொழந்தை பயப்படலியா?...மூஞ்சியெப் பார்த்தா வாந்தி வருது..."

"கொழந்தை ஒண்ணும் பயப்படலே....நீங்கதான் பயப்படுறீங்க..." என்றாள் சிரித்துக்கொண்டே பங்கஜம்.

--வௌியா குழந்தை அழும் குரல் கேட்டது:

"ஆயா...ஹம்ம்...ஆயா.......' குழந்தையின் குரல் வீறிட்டது.

ராஜாராமன் அறையிலிருந்து வௌியே ஓடி வந்தான்.

பங்களாவின் கேட்டைத் திறந்துகொண்டு வௌியேறிய செல்லி கதவுகளை மூடிவிட்டுத் தெருவிலிறங்கிப் போய்க் கொண்டிருந்தாள். அந்தக் 'குட்டிச்சாத்தா'னை நோக்கி, இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு, அவள் போகும் திக்கைப் பார்த்து வீறிட்டு அலறிக்கொண்டிருந்தான் பாலு.

ராஜாராமன் குழந்தையை தூக்கிக்கொண்டபின், அவள் போவதையே பார்த்தவாறு நின்றான்.

'நான் சொன்னதைக் கேட்டிருப்பாளோ?....அவள் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படிப் போவாள்'....சீ' நான் என்ன மனிதன்....?'

குழந்தை அழுதது.

அதன் பிறகு செல்லி அந்தப் பக்கம்கூட வந்தது கிடையாது. மறுநாள் முதல் அவள் தங்கை ரஞ்சிதம், பாலுவுக்கு ஆயாவானாள்'

செல்லிக்கும் மீண்டும் சொறி நாயே துணையாயிற்று'

முறமும் கையுமாய்க் குனிந்திருந்த செல்லி, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்...குடிசைக்குப் பின்புறம் சென்றாள். அவளைத் தொடர்ந்து நாயும் ஓடிற்று. குழந்தையின் அருகில் உட்கார்ந்து வேப்பிலைக் கொத்தால் விசிறிக்கொண்டிருந்தான் ராஜாராமன்.

குழந்தை அடிக்கொருதரம் வேதனை தாங்கமாட்டாமல் அழத் தெம்பில்லாமல் ஈனமான குரலில் சிணுங்கிச் சிணுங்கி அழுதான்.

தாயின் அருகே இருக்கக்கூடாத நிலையில், நிராதரவாய்க் கிடந்து நோயில் துடிக்கும் தன் குழந்தையின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது ராஜாராமனின் கண்கள் கலங்கின. இறந்து போன குழந்தைகளின் பயங்கரக் காட்சி அடிக்கடி மனசில் திரை விரித்தது.

'சீ' காசும் பணமும் இருந்து பயன் என்ன?' அவனுக்கு வாழ்கையே அர்த்தமற்றுத் தோன்றியது.

மணி ஆறு அடித்தது.

இன்னும் ஆயாவைக் காணோம்.

வாழ்வே இருண்டதுபோல் கைகளில் முகம் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் ராஜாராமன்: இருள் படரும் நேரத்தில் அவள் வந்தாள்.

"சாமீ..."

'யாரது? வாசற்படியில் கூனிக் குறுகிக்கொண்டு நிற்கும் அது...யாரது, செல்லியா?'

"செல்லி..."

"சாமீ....நான்தானுங்க செல்லி வந்திருக்கேன்...."

அவள், உடம்பெல்லாம் மஞ்சள் பூசிக் குளித்து, தலை வாரி முடித்து, நெற்றியில் பொட்டிட்டுக்கொண்டு--இயன்ற அளவு தன்னை அலங்கரித்துத் தன் குரூபத் தோற்றத்தை மறைக்க முயலும் புன்னகையோடு எதையோ அவனிடம் யாசிப்பவள் போல் நின்றிருந்தாள்.

கொளந்தைக்கி ஒடம்பு சரியில்லேன்னு இப்பத்தான் சொன்னா ரஞ்சிதம்...அவளுக்குப் பயமா இருக்காம். எனக்கு மனசு கேக்கலே...பார்க்கலாம்னு வந்தேனுங்க...நீங்க கோவிச்சிக்காமெ...இருந்தா கொளந்தையை ஒடம்பு கொணமாகற வரைக்கும் நானே பாத்துக்கிட்டுமுங்களா..." அவள் தயங்கித் தயங்கித் தொடர்பில்லாமல், மனசில் உள்ளதைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் பேசினாள்.

கட்டிலில் கிடந்த குழந்தை புரண்டான்; சிணுங்கி அழுதான். செல்லி உள்ளே ஓடி வந்து அவன் அருகே நின்று விசிறினாள், ராஜாராமன் மீண்டும் முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டான்.

"அவன் உன் குழந்தை'...அவன் உன் குழந்தை'....என்று முனகிக்கொண்டே வௌியேறினான்.

இரவெல்லாம் கண் விழித்துக் குழந்தையைப் பாதுகாத்தாள் செல்லி, அந்தக் குழந்தையின் அருகே தனித்திருந்து தானே அதன் தாய்போலப் பணிவிடை புரிவதில் வாழ்வே நிறைவுற்றது போன்ற திருப்தி பிறந்தது அவளுக்கு.

குழந்தைக்கு தண்ணீர் விடப்போகிறார்கள். செல்லியின் இடைவிடாத கண்காணிப்பினாலும், பரிவு மிக்க பணி விடைகளினாலும் பாலு நோய் தீர்ந்தான். பெற்றவள் கலி தீர்ந்தாள்.

ஆனால் குழந்தையின் முகமெல்லாம் அம்மையின் குரூர வடுக்கள் முத்திரை பதித்து அழகைக் கெடுத்திருந்தன; கரிந்து போன மரப்பாச்சி போலிருந்தது குழந்தை. தனது அழகுச் செல்வத்தைக் கண்டு யாரேனும் 'காணச் சகியாத கோரச் சொரூபம்; குட்டிச்சாத்தான்' என்று முகம் சுளிப்பார்களோ என்று எண்ணியபோது ராஜாராமன் மனம் குமுறினான்.

செல்லியின் கண்களுக்குப் பாலு அழகாய்த்தான் இருந்தான். பிள்ளை தேறினானே, அதுவே பெரும் பாக்கியம் என்று எண்ணி அவள் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

மாலையில் செல்லிக்குத் தலைவலித்தது; உடம்பெல்லாம் வலித்தது. இரவில் காய்ச்சல் வருவது போல் அனத்தியது. பங்களாவின் காம்பவுண்ட் சுவரருகே இருந்த அந்தச் சிறு வீட்டின் வராந்தாவில் கோணியை விரித்து, பழம் புடவையால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

மறுநாள் காலை மணி ஒன்பதாகியும் செல்லி எழுந்து வரக்காணோம்.

தோட்டத்தில் உலாவ வந்த ராஜாராமன் வராந்தாவில் செல்லி படுத்துக் கிடப்பதை பார்த்தான். அருகில் வந்து நின்று "செல்லி.... செல்லி....." என்று அழைத்தான்.

பதில் குரலைக் காணோம்.

முகத்தில் மூடியிருந்தத் துணியை மெல்ல விலக்கினான்----

அவள் முகமெல்லாம் அம்மைக் கொப்பளங்கள் முகிழ்ந்திருந்தன. கண்ணிமைகளும், உதடுகளும் துடித்துச் சிவந்து பார்க்கும்போதே அவனுக்கு உடல் சிலிர்த்தது.

அவள் மெல்லக் கண் திறந்து ஏதோ முனகினாள். செல்லிக்கு அம்மை கண்டுவிட்டது என்று தெரிந்தவுடன் பங்கஜம் கூட எழுந்து ஓடி வந்தாள்.

"ஐயோ, நீங்க ஏம்மா வந்தீங்க..... போங்கம்மா.... உள்ளே போங்கம்மா.... " என்று செல்லி கெஞ்சினாள்.

டாக்டர் வந்தார்; டாக்டரைக் கண்டதும் பங்கஜம் வீட்டுக்குள் நுழைந்தாள். டாக்டர் செல்லிக்கு மருந்து கொடுத்தார். அவள் டாக்டரிடம் வேண்டிக் கொண்டாள்:

"சாமி.... நான் ஆசுபத்திரிக்கிப் போயிடுறேனுங்க..... அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க...."

"வேண்டாம் செல்லி, வேண்டாம்" என்று ராஜாராமன் இடைமறித்தான்.

"மிஸ்டர் ராஜாராமன். அந்தப் பொண்ணு சொல்வதுதான் சரி. ஒடம்பு நல்லாகணும்னா, ஆசுபத்திரிக்கு அனுப்பிச்சுடறதுதான் நல்லது" என்றார் டாக்டர்.

அதன் பிறகு ரஞ்சிதத்துக்குச் சொல்லியனுப்பப்பட்டது.

"அடி எம் பொறவி அக்காவே.... நா அப்பவே சொன்னேனே கேட்டியாடி...." என்று அழுது புழம்பிக் கொண்டே ஓடி வந்தாள் ரஞ்சிதம்.

ராஜாராமன் ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தங்கியிருந்தான். ரஞ்சிதம் தான் செல்லியைப் பார்த்துக் கொண்டாள். பாசம் இருந்தா பயம் அற்று போகாதா, என்ன?

சாயங்காலம் நாலு மணி சுமாருக்கு ஆசுபத்திரியிலிருந்து, செல்லியைக் கொண்டு செல்ல 'வான்' வந்து வாசலில் நிற்கிறது'

ராஜாராமனும் பங்கஜமும் சவம் போல் வௌிறிப் போய் நிற்கிறார்கள்; ரஞ்சிதம் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுகிறாள். செல்லி காம்பவுண்ட் சுவரருகே வந்து நின்றாள்'

--என்ன பயங்கரத் தோற்றம்'

ரஞ்சிதம் ஓடிச் சென்று அவளைக் கைத்தாங்கலாய் அழைத்து வருகிறாள். காரின் அருகே வந்ததும் செல்லி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்க்கிறாள். அவளருகே ராஜாராமனும் ரஞ்சிதமும் நிற்கின்றனர். காரிலேற முடியாமல் செல்லி தவிக்கிறாள்; பார்வை கலைகிறது'

"என்ன வேணும் செல்லி, என்ன வேணும்?.... பயப்படாமல் கேள்.....' " என்கிறான் ராஜாராமன்.

"பாலு..... பாலுவை ஒருதடவை பாத்திட்டு...." அவள் குரல் அடைத்தது; கண்கள் கலங்கின.

"இதோ....உனக்கில்லாத பாலுவா...." என்று உள்ளே ஓடினான்....

கன்னங்கரேலென்று நிறம் மாறி, இளைத்துத் துரும்பாய் உருமாறிப் போன குழந்தையுடன் வந்து அவளருகே நின்றான்.

"பாலு...."

"ஆயா"... குழந்தை சிரித்தான்.

"பாலு, அப்பா மூஞ்சி எப்படி இருக்கு?"

குழந்தை முகத்தைச் சுளித்து வலிப்புக் காட்டினான்.

"அம்மா மூஞ்சி?"

---மறுபடியும் அதே சுளிப்பு; வலிப்புக் காட்டினான்.

"பாலு மூஞ்சி எப்படி?" கண்கள் மலரச் சிரித்தான் குழந்தை.

"ஆயா மூஞ்சி?"

சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிடத் தாவினான் குழந்தை. அம்மைக் கொப்புளங்கள் நிறைந்த முகத்தை மூடிக்கொண்டு விலகிக்கொண்டாள் செல்லி.

"ரஞ்சிதம், கொளந்தையைக் கவனமாப் பாத்துக்க. நான் போய் வரேன் சாமி...வரேன் அம்மா" என்று கரம் கூப்பி வணங்கினாள். ராஜாராமன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"போய் வா'..." என்று கூவினாள் பங்கஜம். அவள் உதடுகள் துடித்தன; அழுகை வெடித்தது.

ஆசுபத்திரி கார் அவளை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது.... கார்மறையும் வரை அவர்கள் எல்லோரும் தெரு வாசலிலேயே நின்றிருந்தனர்.

எங்கிருந்தோ ஓடிவந்த அந்தக் கறுப்புச் சொறி நாய், ஆசுபத்திரிக் காரைத் தொடர்ந்து ஓடியது'

முற்றும்.

குறைப் பிறவி - ஜெயகாந்தன் - I



குறைப் பிறவி

எழுத்து - ஜெயகாந்தன்

"சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும்" என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம்.

பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன பயன்? உடன்பிறந்த நோய் அவளை நித்திய நோயாளியாக்கி இருந்தது. கலியாணம் ஆகி இந்த ஐந்து வருஷங்களில் நான்கு குழந்தைகள் பெற்றாள். வயிற்றில் ஒன்று தரித்ததும், கையிலிருக்கும் மற்றொன்று குழியை அடையும்...இப்படியே மூன்று குழந்தைகளும் இறந்தன. இப்பொழுது வயிற்றில் ஏழுமாதம்.

திடீரென்று போனவாரம் கைக்குழந்தை பாலுவுக்கு இரண்டு நாள் ஜ்உரம் கண்டிருந்தது; மறுநாள் நெற்றியிலும் முகவாயிலும் ஓரிரு முத்துக்கள் தோன்றின. நான்காம் அவை பெருகின; ஒரு வாரத்திற்குள், அம்மைக் கொப்புளங்கள் இல்லா இடமே தெரியாத அளவுக்கு உடம்பெங்கும் பரந்து....

பங்கஜத்துக்கும் அவள் கணவன் ராஜாரமனுக்கும் 'குழந்தை பிழைக்காது' என்ற எண்ணம் வலுவடைந்தது. பங்கஜத்துக்கோ எழுந்து நடமாட முடியாத பலஹீனம்..... அவளுக்கு டி.பி. இருக்கலாமோ என்று வேறு டாக்டர் சந்தேகிக்கிறார்....

பாலு ஸ்மரணையற்றுக் கிடக்கிறான், அவனைப் பங்களாவின் காம்பவுண்ட் சுவரோரமாக அமைந்திருக்கும் 'அவுட் ஹவுஸி'ல் கட்டிலில் கிடத்தி இருக்கிறார்கள். அவனருகே கூட, பங்கஜம் வரக்கூடாதாம். இது டாக்டரின் யோசனை.

சமையல்காரனோ, அவன் ஒரு மாயாவி' அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது சமைப்பான் என்று யாருக்கும் தெரியாது. காலையில் காப்பி குடிக்கப் போகும்போது 'இன்று என்ன சமைப்பது?' என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொண்டு விட்டால் போதும். அதன்பின் சாப்பாட்டு நேரத்தில் அங்கு எல்லாம் தயாராயிருக்கும். மற்ற நேரத்தில் அவன் கண்ணில் படமாட்டான்.

குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகவே ரஞ்சிதம் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். தன் குழந்தையைத் தானே கவனித்துக்கொள்ள பங்கஜத்திற்குக் கொள்ளை ஆசையிருந்தும் சக்தி இல்லை' வைத்திய சாஸ்திரமும் வாய்த்திருக்கும் கணவனும் அதற்கு அனுமதிக்கவில்லை.

'இப்பொழுதுதான் ரஞ்சிதம் இல்லையே, அவள் வரும் வரை நான் போய்ப் பார்த்துக் கொண்டால்...'

பங்கஜம் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு, பாலு படுத்துக்கிடக்கும் அந்தத் தனி வீட்டில் நுழைந்தாள். வேப்பிலை சயனத்தில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் பாலு. கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அதன் விதியைக் கணக்கிடுவதுபோல்--குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பங்கஜம்.

மணி ஒன்றாயிற்று.

இன்னும் ரஞ்சிதத்தைக் காணோம்; குழந்தைக்குப் பங்கஜமே மருந்து கொடுத்தாள். கஞ்சி கொடுத்தாள். வேப்பிலைக் கொடுத்தால் விசிறிக்கொண்டு ரஞ்சிதத்தின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

ரஞ்சிதத்தைக் காணோம். பங்கஜத்தின் கணவன் ராஜாராமன் மூன்று மணிக்கு வந்தான். பங்கஜம் பாலுவின் அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டான்.

"பங்கஜம், என்ன இது' ஏன் இங்கே வந்தே?"

"வீட்டுக்குப் போன ரஞ்சிதத்தைக் காணோம்... குழந்தைக்கு யாரு கஞ்சி குடுக்கறது, மருந்து குடுக்கறது...?"

சரி சரி, நீ உள்ளே போ, நான் பார்த்துக்கறேன்...." என்று கோட்டையும் 'டை'யையும் கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு, அவன் போய் பாலுவின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.

ரஞ்சிதமும் செல்லியும் சகோதரிகள். தங்கையின் குடிசையில்தான் செல்லியும் வாழ்கிறாள். ரஞ்சிதத்தின் புருஷன் கொத்தனார் வேலை செய்கிறான். மூத்தவளாய்ப் பிறந்தும் செல்லிக்குக் கலியாணம் ஆகவில்லை; ஆகாது.

செல்லிக்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது என்றாலும் வளர்ச்சி பன்னிரண்டு வயதோடு நின்றுவிட்டது. முகமோ முப்பதுக்கு மேலே முதுமை காட்டியது...நரங்கிப் போன உருவம்; நாலடிக்கும் குறைவான உயரம்; கறுப்புமல்லாத சிவப்புமல்லாத சோகை பிடித்து வௌிறிப்போன சருமம். தலை முடியெல்லாம் ஒன்று சேர்ந்து சிக்குப் பிடித்து, எலிவால் மாதிரி பின்புறம் தொங்கும். முன் பற்கள் இரண்டும் உதட்டைக் கிழித்துக்கொண்டு வௌித்தெரியும்...அவளை யாரும் மணக்க முன்வராததற்குக் காரணம் இந்த அங்க அவலட்சணங்கள் மாத்திரமேயன்று. அவள் முழுமை பெறாத மனித ராசி; குறைப் பிறவி'

குடிசை வாசலில் உட்கார்ந்து முறத்தில் கொட்டிய அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் செல்லி.

தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், அப்படியே உறங்கிப் போவதும் அவளுக்குத் தினசரிப் பழக்கம். ரஞ்சிதத்துக்குத் தன் தமக்கையின் மீது உயிர். செல்லிக்கோ மனிதர்கள் என்றாலே பாசம்தான். மனிதர்கள் என்ன, நாயும் பூனையும்கூட அவளது எல்லையற்ற அன்புக்குப் பாத்திரமாகிவிடும். சொல்லப் போனால் அவைதான் அவளது அன்பை ஏற்றுக் கொண்டன. மனிதர்கள்-- அவள் தங்கையைத் தவிர--மற்றவர்கள் அவளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கி நடந்தார்கள். இப்பொழுதும் கூட அவள் அருகே சொறி பிடித்த ஒரு கறுப்பு நாய்க்குட்டி வாஞ்சையுடன் நின்று வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவளுக்கும் அதற்கும் அத்யந்த நட்பு.

மணி ஐந்தாகியும் ரஞ்சிதம் வேலைக்குப் போகாததைக் கண்டசெல்லி குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள்,

"ரஞ்சிதம், நீ வேலைக்குப் போகலியா'..."

"இல்லே....நான் போகமாட்டேன்." "ஏண்டி....என்னா நடந்திச்சு?"

"அந்த புள்ளைக்கி மாரியாத்தா வாத்திருக்கு...பாத்தாவே பயமா இருக்கு...ஸ்...அப்பா" என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள் ரஞ்சிதம்.

"யாருக்கு...பாலுவுக்கா?"

"டாக்டரு வந்து, அந்த வௌிவூடு இருக்கு பாரு அதிலே கொண்டு போயிப் போடச் சொல்லிட்டாரு புள்ளையெ.....பெத்தவகூட கிட்டப் போகக் கூடாதாம்...என்னெப் பாத்துக்கச் சொன்னாங்க புள்ளையெ...வீட்லே போயிச் சொல்லிட்டு வர்ரேன்னு வந்துட்டேன். நான் போக மாட்டேண்டி அம்மா...எனக்குப் பயமாயிருக்கு...." என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தலையை உசுப்பினாள் ரஞ்சிதம்.

"இம்மா நேரம் புள்ளை எப்படித் துடிக்கிறானோ? பெத்தவளும் கிட்ட இல்லாம அந்த ஐயா எப்படித் தவிக்கிறாரோ" என்று சொல்லித் தவித்தாள்.

அவளது குனிந்த பார்வையில், பாலுவின் சிரித்த முகம் தெரிந்தது. அவனது பிஞ்சுக் கரங்கள் அவள் முகத்தில் ஊர்வதுபோல் இருந்தது.

"நான் போய்ப் பாலுவைப் பார்த்துக்கிட்டா....சம்மதிப்பாங்களா?....அந்த ஐயா என்ன சொல்லுவாரோ?...."

இந்த யோசனைகள் தோன்றியதும் அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

பாலுவைப் பார்த்துக்கொள்ளும் 'ஆயா' உத்தியோகம் முதலில் செல்லிக்குத்தான் கிடைத்தது.

(தொடரும்).....

யுக சந்தி - ஜெயகாந்தன்-III


அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.

வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா?

ஆனால்...

கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம் கொன்றிருந்த கௌரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்?

அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ... கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் 'ஐயோ' என்ன இப்படி ஆய்விட்டதே'... என்ன இப்படியாய் விட்டதே' என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி.

பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,

"பாட்டிடீ..." என்று ரகசியமாக எச்சரித்தான்.

'எங்கே? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா?' என்று பின் வாங்கி நின்றாள் மீனா.

"சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா..." என்றான் அம்பி.

மீனா தோள் வழியே 'ஸ்டைலாக' கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.

அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். "பாட்டி வெள்ளிரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே..." என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை.

"எப்ப வந்தேள் பாட்டி?" என்ரு கேட்டுவிட்டு "என்ன விஷயம்-- இதெல்லாம் என்ன?" என்று சைகையால் கேட்டாள் மீனா.

பாட்டியின் கண்கள் குளமாயின.

மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்-- கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்--புரிந்தது பாட்டிக்கு.

அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்.

"அதை நீ படிக்க வேண்டாம்' என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ 'படிக்கட்டுமே' என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.

மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.

"அடி நாசமாப் போக" என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.

வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.

இரவு முழுதும் கௌரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.

மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.

'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா? இப்போதல்லவா தெரிகிறது... பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு... இப்பன்ன புரியறது... கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி'--

'என்னடி இப்படி பண்ணிட்டியே' ' என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.

விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது.

தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம்.

கண் விழித்த பாட்டி-- நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் 'இது உண்மை' என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.

அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி "அம்மா வேலாயுதம் வந்திருக்கான்... அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு..." என்றார்.

"வாயை மூடுடா..." என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு... இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே?..." என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.

"என்னடா தப்புப் பண்ணிட்டா அவ?... என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு,' என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை.

"என்ன தப்பா?...... என்னம்மா பேசறே நீ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா?" என்று கத்தினார் கணேசய்யர்.

அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை.

பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: "ஆமாம்டா... எனக்குப் பைத்தியந்தான் ... இப்பப் பிடிக்கலைடா... இது பழைய பைத்தியம்? தீரமுடியாத பைத்தியம்... ஆனால் என்னோட பைத்தியம்-- என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் 'படீர்' னு தௌிஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது?...... அவதான் சொல்லிட்டாளே-- என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு..."

"அதனாலே சரியாகிடுமா அவ காரியம்?" என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர்.

"அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்... அதுக்கென்ன சொல்றே?" என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி.

"சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி -- செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன்" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.

"நம்ம சாஸ்திரம்...ஆசாரம்' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா....' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?.....ஏன் பண்ணலே சொல்லு" என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்' அவள் தொடர்ந்து பேசினாள்.

"ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும்' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு' நான் வர்ரேன்" என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள்.

"அம்மா' ஆ...." என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.

"அசடே....எதுக்கு அழறே? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்... என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா" என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். "பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ..." என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி.

"எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும்" என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி.

"நீ போடாப்பா....நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு" என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள்.

'இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை---அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது' நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக்கொள்ளக் கூடாதா?' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று "நான் போயிட்டு வரேன்" என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள்.

அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....

வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?......

ஓ' அதற்கு ஒரு பக்குவம் தேவை'


முற்றும்

நான் யாரிடம் கேட்பது?

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.

அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்

அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “

அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்

-ஓஷோ

Wednesday, May 26, 2010

யுக சந்தி - ஜெயகாந்தன் - II



பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...

பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்-- புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய--- நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.

"அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு...." என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.

இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி--ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.

இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை.

ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.

-- பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி' என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள்.

"கதவெத் தெறடி" என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், "அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா'..." என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.

கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.

கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் "ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே' " என்று குழந்தையை வைதுவிட்டு "வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேள்...... ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ? " என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.

"இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்..." என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் "நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி'... அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு" என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.

"பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திண்டிறேன்..." என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தௌித்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து "என்னப்பனே... மகாதேவா" என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.

"பாட்டி வெயில்லே வந்திருக்கா...சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு..." என்று விசிறிக்
கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர்.

"இருக்கட்டும்டா....கொழந்தை' நீ உக்காந்துக்கோ.... என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.

'இப்ப என்ன பண்ணுவியாம்' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.

ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.

"ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே? காணோம்?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு 'இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா" என்று கவரை நீட்டினாள் பாட்டி.

இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் ---எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, "ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே.... போகட்டும்னு அனுப்பி வெச்சேன்" என்றார் கணேசய்யர்.

"ஓ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது?... பேரைப் பார்த்தேன்..." என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. "இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்?... நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ..." என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, "கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்" என விளக்கினாள் பாட்டி.

கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் --- கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் 'குப்'பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்....

தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென இருளடைந்தது' நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை.

'என்ன விபரீதம்' ' என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வௌிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும்'

"என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு....

இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌிந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.

என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

என் காரியம் என் வரைக்கும் சரியானதே'

நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.

இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை'கீதா செத்துவிட்டாள்' என்று தலை முழுகி விடுங்கள்.

ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம்' செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்?

உங்கள் மீது என்றும்

மாறாத அன்பு கொண்டுள்ள

கீதா"

"என்னடா.. இப்படி ஆயிடுத்தே?" என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி.

"அவ செத்துட்டா...தலையெ முழுகிட வேண்டியது தான்" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.

பாட்டி திகைத்தாள்'

--தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த 'அம்மாப் பிள்ளை' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை.

"அப்படியாடா சொல்றே?" என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி.

"வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே?...நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே... ஐயோ...' " என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர்.

'நான் பிறந்த யுகமே வேறேடா' என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:

'என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்... அதுபோல் தன் குடும்பமும் நடக்க -- நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்-- அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கௌரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்...' என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மௌனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.

அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி "அடி, பாவி மகளே...என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி' " என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்....

"ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, 'தியாகம்' செய்து விட்டார்கள்?' --பாட்டிக்குச் 'சுருக்' கென்றது.....உதட்டைக் கடித்துக் கொண்டாள்....

இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும்.

கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்-- 'அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற தாயும் தந்தையும்?... கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள்'...

(தொடரும்).....