Wednesday, November 23, 2011

வாஷிங் மெஷின்






இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?

வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய துணி, பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.

இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை `செட்’ செய்து வைத்துவிட வேண்டும்.

இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி, பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணியின் தரத்தைப் பொறுத்து சுழல வேண்டிய நேரத்தைக் கணக்கிடுவது போன்று பல வேலைகள் உண்டு.

வாஷிங் மெஷினின் பொத்தானை அழுத்தியதும் தண்ணீரானது தானியங்கி வால்வு வழியாகச் செலுத்தப்படும். நீரை நிறுத்திச் செலுத்த ஒரு பிரஷர் சுவிட்ச் உள்ளது. இது சிக்னலை அனுப்பும். பிரஷர் சுவிட்சில் உள்ள டயாபிரம், நீர்மட்டத்தில் உள்ள காற்றின் விசையால் மேலே தள்ளப்படுகிறது. பிறகு மைக்ரோ சுவிட்சு மூலம் தடுக்கப்பட்டு, மின் சுற்று முடிந்து வால்வு மூடிக்கொள்ளும். தண்ணீரின் மட்டம் சில்க், சிந்தெட்டிக் போன்ற வழவழப்பான துணிகளுக்கு அதிகமாகவும், பருத்தி போன்ற முரட்டுத் துணிகளுக்குக் குறைவாகவும் இருக்கும். இந்த நீர்மட்டத்தை குறிப்பாக அதிகரிக்க, குறைக்க மைக்ரோ சுவிட்சுகள் உண்டு.

சலவை உருளையை உருளச் செய்வதற்கு என்று ஒரு மோட்டார் உள்ளது. இது சலவை செய்ய, காய வைக்க, அலச என்று எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. 1100 ஆர்.பி.எம். வேகத்தில் இது ஓடும். அலசிப் பிழிந்த தண்ணீரை அகற்ற ஓர் உறிஞ்சும் பம்பு உதவுகிறது. எலக்ட்ரோ மாக்னெட்டின் உதவியால் வேலை ஆரம்பிக்கும்போது கதவு மூடும்.

வேலை முடிந்ததும் ஆட்டோமேட்டிக்காக கதவு திறக்கவும் செய்யப்படுகிறது. உருளை போன்றவை சுழலும் பாகங்களின் இயக்கத்தைச் சமன் செய்கின்றன. அதிர்வைக் குறைக்க அதற்கேற்ற ஸ்பிரிங்குகள், அதிர்வுத் தடை உறிஞ்சிகள் உள்ளன.

நமது உடம்பு ஓர் அதிசயம்!




எது எதுவோ அதிசயம் என்று பேசுகிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் பிறக்கும்போது நமது உடலில் 270 எலும்புகள் அமைந்திருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றில் 64 எலும்புகள் காணாமல் போய்விடுகின்றன. மனிதன் முதுமைப் பருவமடைந்து இறக்கும்போது 206 எலும்புகளே
எஞ்சியிருக்கின்றன. குறிப்பிட்ட எலும்புகள் எப்படிக் காணாமல் போகின்றன? அவை மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடுகின்றன.

நமது உடம்பில் தேவைக்கேற்ப மின்சாரமும் உள்ளது. இந்த மின்சாரத்தைக் கொண்டு 25 வாட் மின்சார விளக்கை எரியவிடலாம். அல்லது நான்கு கெட்டில்கள் நிறையத் தண்ணீரைக் கொதிக்க விடலாம்.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 52 டன் எடையுள்ள உணவை உண்கிறான். 19 ஆயிரம் காலன் திரவங்களை அருந்துகிறான்.

நன்றி - senthilvayal.wordpress

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!

வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம்.

கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது.

மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

பண அழுத்தம்

பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.

பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.

மது போதை பழக்கம்

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுகமான சுமைகள்

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

உற்சாக ரசாயனம்

உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

மனசே ரிலாக்ஸ்

தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியே வழி

கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.

இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.