Tuesday, February 1, 2011

உடலும் மனமும் இணையட்டும்!

* ஆனந்தமாக இருப்பது தான் உங்கள் அடிப்படை இயல்பு என்பதை மறவாதீர்கள். நீங்கள் எந்தச் செயலை தேர்ந்தெடுத்தாலும், அதைச் செயல் படுத்தும் போது தீவிரமாயிருங்கள். முழு ஈடுபாடு கொண்டு செயலாற்றுங்கள்.

* உங்களுக்குள் இருக்கும் ஆக்க சக்தியை தட்டி எழுப்புங்கள். முழுஈடுபாடு கொண்டு செயலாற்றும் போது மட்டுமே நமக்குள் இருக்கும் ஆக்கசக்தி வெளிப்படத் தொடங்கும்.

* கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது. அதனால் திருப்பங்கள் வேண்டுமானால் வாழ்க்கையில் புதிய முயற்சிகளை எடுத்துத் தான் ஆக வேண்டும்.

* இளைஞர்களுக்கான தகுதி வலுவான உடல் அமைப்பு மட்டும் என்று தவறாக எண்ணுகிறோம். திடமான மனம் கொண்டவனே உண்மையில் இளமை உடையவன். எதிர்பாராததையும் எதிர்கொள்ளும் துணிச்சல் நமக்கு வேண்டும்.

* பொறாமையும், அச்சமும் நம்முள் உண்டாகும் போது அடுத்தவரை எதிரியாக நினைக்கத் தொடங்குகிறோம். பொறாமை இருக்கும் இடத்திலோ, அச்சம் இருக்கும் இடத்திலோ திறமை மழுங்கிப்போகும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் (முயற்சியும்) உங்களுக்காகவே என்று எண்ணுங்கள்.

* உங்கள் உடல், மனம் இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன் படுத்துவதில் தான் உண்மையான வெற்றி அடங்கி இருக்கிறது. அப்போது நம் திறமை முழுவதுமாக வெளிப்படும். வெற்றி எளிதில் நம் வசமாகும்.

No comments: