Thursday, February 3, 2011

நடனமாடும் பொம்மை


தண்ணீர் பாட்டில் உள்பட தூக்கி எறியும் பழைய பொருட்களைக் கொண்டே, அழகிய நடனமாடும் பொம்மையை உருவாக்கலாம். என்ன, ஆச்சரியமாக உள்ளதா? சூப்பர் பொம்மையை எளிதாக செய்து அசத்தலாம் வாங்க!



தேவையான பொருட்கள்:
காலி தண்ணீர் பாட்டில், தடிமனான அட்டை, பெரிய ஆணி, உதவாத பேனா ரீஃபில், வெள்ளைக் காகிதம், பாசி மணிகள், நூல், வண்ணக் காகிதத் துண்டு, பசை, கத்தரிக் கோல்.




செய்முறை:

பிளாஸ்டிக் பாட்டிலின் மேற்பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூடியில் ஆணியால் துளையிடுங்கள். மேற்பகுதியின் அடிப்பாகத்தை தடிமனான அட்டை மீது வைத்து, பாட்டிலின் விட்டத்துக்கு சரியாக அட்டையை கத்தரித்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் அட்டையில் ஒரு சிறிய வட்டம் கத்தரித்துக் கொண்டு, அதன் நடுவில் துளையிடுங்கள்.




பேனா ரீஃபிலில் சிறிய வட்டத்தை செருகிக் கொள்ளுங்கள். இப்போது வெள்ளைக் காகிதத்தை நீளமான துண்டாகக் கத்தரித்து, அதை சிறிய அட்டை பொருத்தியுள்ள பகுதிக்கு மேல் ரிஃபில்லில் சுற்றுங்கள்.




இப்போது பாட்டிலின் அடிப்புறமாக ரீபில்லை நுழைத்து, பாட்டில் மூடியில் உள்ள துளை வழியாக ரீஃபில்லின் சிறு பகுதியை வெளியே கொண்டு வாருங்கள். வண்ணக் காகிதத்தை எடுத்துக் கொண்டு, பொம்மைக்கு தலை மற்றும் உடல் பகுதிகளை கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.


சிறிய அளவில் இரண்டு நூல் துண்டுகளை எடுத்து, அதில் பாசி மணிகளை கோர்த்துக் கொண்டு, கைகளைப் போன்று பசை தடவி ஒட்டுங்கள். இதே போல ஐந்து நூல் துண்டுகளை எடுத்து, அதில் பாசி மணிகளைக் கோர்த்து, பாவாடை போல ஒட்டிக் கொள்ளுங்கள்.

பாட்டிலில் செருகப் பட்டிருக்கும் ரீஃபில்லில் பசை தடவி, இந்த பொம்மையை அப்படியே ஒட்டி விடுங்கள். கடைசியாக, பாட்டிலின் அடிப்புறத்தில் பசை தடவி, கத்தரித்து வைத்துள்ள தடிமனான அட்டை மீது ஒட்டி விடுங்கள்.

இப்போது மேற்புறமிருந்து ரீஃபில்லை சுழ்ற்றினால், பாட்டிலின் உள்ளே இருக்கும் பொம்மை அழகாக நடனமாடும்.

No comments: