Monday, July 4, 2011

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்




உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது, அவை பல ஆயிரம் கி.மீ., தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து, இலக்கை அடைகின்றன.
“பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது…’ என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள், சக்தி பெற, “பெர்ரி’ பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன…’ என்று, ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.
பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது, இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது, பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:
மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட, ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான், பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால், எந்த அளவு சக்தி கிடைக்குமோ, அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன.
இவ்வாறு நவீன்டிராசீரம் கூறி யுள்ளார்.
பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.


http://senthilvayal.wordpress.com

No comments: