Friday, May 20, 2011

உயிர் காத்த சத்தியம்


இந்தப் புதிய தலைப்பிற்கான முதல் கதையை நமது பெரு மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றுள்ளோம். 1931ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றிய திரு கலாம் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவருடைய அரும்பெரும் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு `பாரத ரத்னா' பட்டம் தந்து சிறப்பித்தது. 2002ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24ஆம் தேதியன்று, அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி, சத்தியத்தின் மதிப்பைப் பற்றி நமக்கு ஓர் கதையை அனுப்பியுள்ள திரு அப்துல் கலாம் அவர்களுக்கு சந்தமாமா மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் அப்துல் காதர் அல்கிலானியின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சி இது! அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, ஒருநாள், அவர் புல்வெளியில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில், அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று அவரை நோக்கி, "நாங்கள் மேயும் இடத்தில் உனக்கு என்ன வேலை? இப்படி சோம்பேறியாக உட்கார்ந்து பொழுதுபோக்க உன்னைப் படைக்கவில்லை!" என்று கூறியதைக் கேட்டதும், பயந்துபோன அவர் தன் வீட்டிற்கு ஓடிச் சென்று தன் வீட்டின் மாடிக்குச் சென்றார். அங்கிருந்து கீழ் பார்க்கும்போது, ஹஜ் பயணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஏராளமான பயணிகளைக் கண்டார்.
அதைக்கண்ட அப்துல் கீழே வந்து, தன் தாயிடம் ஹஜ் பயணத்தைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டு விவரங்களைத் தெரிந்து கொண்டார். உடனே, தானும் ஹஜ் செல்ல விரும்புவதாகத் தாயிடம் கூறி அனுமதியும் பெற்றுக் கொண்டார். அப்துலின் தந்தை அவருக்காக விட்டுச் சென்ற நாற்பது பொற்காசுகளை பயணத்தின் பொருட்டுக் கொடுக்க நினைத்த அப்துலின் தாய், அவற்றை அவனுடைய சட்டையின் உட்புறம் ஒரு பையில் வைத்து சட்டையோடு சேர்த்து ஊசி, நூல் கொண்டு பத்திரமாகத் தைத்து விட்டார். பிறகு, அப்துலுக்கு விடை கொடுத்த அவர் தாய், "மகனே! புனிதப் பயணம் சென்று வா! அல்லாவின் பொருட்டு, உன்னை இப்போது என்னிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதிக்கிறேன். இனி உன்னை எப்போது காண்பேன் என்று தெரியாது. உனக்கு இப்போது நான் கூறும் அறிவுரையை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்! எப்போதும் சத்தியத்தையே பேசு! சத்திய வழியிலேயே நட! உன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் சத்தியத்தைக் கை விடாதே!" என்றாள். தன் தாயிடம் விடைப்பெற்றுக் கொண்ட அப்துல் காதர், ஏற்கெனவே ஹஜ் பயணம் சென்று கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து கொண்டார். துர்பாக்கியவசமாக, பயணிகளை கொள்ளைக்காரர்கள் வழிமறித்து கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

அப்துல் காதரை நோக்கி அவர்களில் ஒருவன், "உன்னைப் பார்த்தால் பரம ஏழையாகத் தோன்றுகிறது. உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்க, அப்துல், "என் தாய் கொடுத்த நாற்பது பொற்காசுகள் என் சட்டையின் உட்புறப் பையில் உள்ளன!" என்று உண்மையைக் கூறினார்.
பரம ஏழையாகத் தோன்றிய அப்துல் பொய் சொல்கிறார் என்று அந்தக் கொள்ளைக்காரன் அவரை ஒன்றும் செய்யாமல் செல்ல, மற்றொருக் கொள்ளைக்காரன் அவரை அணுக, அவனிடமும் அப்துல் உண்மையையே கூறினார். அந்தக் கொள்ளைக்காரனும் அவர் சொல்வதை நம்பவில்லை. இறுதியில், கொள்ளைக்காரர்கள் அப்துலைத் தங்கள் தலைவன் முன் நிறுத்தி, "இவன் பரம ஏழையாகத் தோன்றுகிறான். ஆனால் தன்னிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாகச் சொல்கிறான். மற்ற எல்லாரையும் கொள்ளையடித்து விட்டோம். இவன் சொல்வது பொய் என்று தோன்றுவதால், இவனை விட்டுவிட்டோம்!" என்றனர்.
தலைவன் அவரிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அவர் மீண்டும் அதே பதிலையேக் கூறினார். தலைவன் அவரைச் சோதனையிட, நாற்பது பொற்காசுகள் அகப்பட்டன. ஆச்சரியமடைந்த தலைவன் அவரிடம் உண்மையைக் கூறியதன் காரணத்தை வினவ, அதற்கு அப்துல், "உயிர் போனாலும் சத்தியத்திலிருந்து தவறக் கூடாது என்ற என் தாயின் வேண்டுகோளுக்கிணங்கி நான் உண்மையையேக் கூறினேன். கேவலம் நாற்பது பொற்காசுகளுக்காக நான் அவளுக்குக் கொடுத்த வாக்கிலிருந்து தவற விரும்பவில்லை!" என்றான்.
அவருடைய சொற்களைக் கேட்டு கொள்ளையர் தலைவன், "நீ உன்னுடைய தாயின் சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்டு சத்திய வழியில் நடந்தாய்! ஆனால் நாங்களோ எங்கள் பெற்றோரின் நம்பிக்கையை சிதைத்து, அவர்களுக்கும், அல்லாவிற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.
இனிமேல், நீதான் எங்கள் குருவாக இருந்து, எங்களை சத்திய வழியில் நடத்திச் செல்ல வேண்டும்!" என்று கூறினான். அதற்குபின் அவர்கள் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு நேர் வழியில் நடக்கத் தொடங்கினர்.
அந்த நிகழ்ச்சிதான் ஷேக் அப்துல் காதர் அல்கிலானி என்ற மகான் தோன்ற வித்திட்டது.

No comments: