Friday, April 29, 2011

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி


  • சிக்கன் - ஒரு கிலோ
  • பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
  • எண்ணெய் - 200 கிராம்
  • பட்டர் - 50 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • தயிர் - 1/2 லிட்டர்
  • ப்ரைடு ஆனியன் - ஒரு கப்
  • பச்சை மிளகாய் - 3
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சை - ஒன்று
  • பட்டை - ஒரு சிறிய துண்டு
  • ஏலக்காய் - 3
  • கிராம்பு - 5
  • பிரிஞ்சி இலை - 2
  • ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி
  • கருப்பு ஏலக்காய் - 2
  • ஜாதிபத்திரி - சிறிதளவு
  • கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
  • புதினா - ஒரு கொத்து
  • குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும்.

சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.

அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும். இடையிடையே திறக்க கூடாது. ஸ்டீம் வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும். (சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.)

அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.

சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம். ஒரு சிலர் இன்னும் நிறைய வாசனை பொருட்கள் சேர்ப்பார்கள். இதில் கொடுத்துள்ளவை மற்றும் சேர்த்தாலே சுவை நன்றாக இருக்கும். கசூரிமேத்தி பவுடர் (வெந்தயக்கீரை பவுடர்) சிறிது சேர்த்தாலும் சுவைக் கூடும்.

No comments: