Tuesday, December 6, 2011

இதயம் காக்கும் `சூப்பர் புராக்கோலி’!




`புராக்கோலி’ என்பது ஒரு மேலைநாட்டுக் காய்கறி வகை. தற்போது நம்மூர் குளுகுளு காய்கறி அங்காடிகளிலும் கிடைக்கிறது.

இதுதொடர்பான ஓர் இன்ப அதிர்ச்சியான விஷயம், இதயநோய், புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஒரு `சூப்பர் புராக்கோலி’யை உருவாக்கியிருப்பதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறும் தகவல்.

நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கியுள்ள புதிய புராக்கோலி, வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ளது என்கிறார் கள்.

இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் `ஆன்டி ஆக்சிடன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆய்வுக்குழுவுக்குத் தலைமை வகித்த ரிச்சர்ட் மிதன் கூறும்போது, “ஆரோக்கியம் காப்பதில் இது போன்ற காய்கறிகளின் பங்கு குறித்த புதிய தெளிவை எங்கள் ஆய்வு வழங்கியிருக்கிறது. இதன்மூலம், நாமë அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார்.

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினத்தந்தி

No comments: