Friday, September 23, 2011

வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்!


பூமியில் சில இடங்களில் தரைப் பரப்பின் அடியில் உள்ள நீர் மிகவும் சூடாகி கொதிநிலையை அடைகிறது. நீரின் கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட். ஆனால் மிகுந்த அழுத்தத்தினால் கொதிநிலையை அடையும்முன்பே மிகச் சூடடைந்து விடுகிறது.

பிறகு கொதிநிலையை அடைந்த உடனே நீராவியாகி விரிவடையத் தொடங்குகிறது. அவ்வாறு விரிவடையும்போது நீரை மேலே தூக்குகிறது. இதனால் நீர்ப் பரப்பில் அழுத்தம் குறைய, அப்பரப்பில் உள்ள தண்ணீர் கொதிநிலையை அடைந்து மேலும் நீராவி உண்டாகிறது.

இம்மாதிரி சேரும் நீராவியின் விசையால் தண்ணீர் மேலே தூக்கப்பட்டு தரைப் பரப்பில் இருந்து 15 முதல் 20 மீட்டர் உயரம் வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. பிறகு நீரூற்றுப் பாதையில் மேலும் குளிர்ந்த நீர் வந்து சேர, அது கொதிநிலை அடைந்து, நீராவி மேலும் நீரை வெளியே தள்ளுகிறது. இந்தச் சுழற்சி தொடர்கிறது.

அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க்கில் உள்ள கொதிநீரூற்று, 65 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிட நேரத்துக்குக் கொதிநீரை வெளிப்படுத்துகிறது. இந்த ஊற்று நீரில் தாதுப் பொருட்கள் கரைந்திருக்கின்றன.

எரிமலைகள் உள்ள பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளும், கொதிநீரூற்றுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக தென் அமெரிக்கா, ஜப்பான், மலாய் ஆர்ச் பிலாகோ, இத்தாலி போன்ற நாடுகளில் வெந்நீரூற்றுகள் உள்ளன. ஐஸ்லாந்து, நியூசிலாந்து, யெல்லாஸ்டோன் பார்க் ஆகிய இடங்களில் இவை அதிகமாக உள்ளன. `கெய்ஸர்’ என்று அழைக்கப்படும் கொதிநீரூற்று தரையில் இருந்து 15 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை பீறிட்டு அடிக்கும். நீரையும், நீராவியையும் பல மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும்.

வெந்நீர் ஊற்றானது கொதிநீரூற்றைப் போல சீறி அடிக்காது. இதன் வெப்பநிலை ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும். இதன் நீர் எவ்வளவு சீக்கிரம் சூடு அடைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குளிர்ந்து விடும்.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

No comments: