Friday, September 23, 2011

ஜியோமெட்ரி’யின் தந்தை!


`ஜியோமெட்ரி’ என்ற கணித முறை வந்தபிறகுதான் கணிதத் துறையில் பல குழப்பங்களும், சிக்கல்களும் தீர்ந்தன. முக்கியமாக, பலவித கோணங்களில் அளந்து கணக்கிடுவதற்கு ஜியோமெட்ரி முறை மிகவும் பேருதவியாக இருக்கிறது.

கிரேக்க மொழியில் `ஜியோமெட்ரி’ என்பதற்கு நிலத்தை அளத்தல் என்று பொருள். எகிப்து நாட்டில் பல்வேறு கோணங்களில் பரவிக் கிடந்த விளைநிலங்களை அளந்து ஒழுங்குபடுத்துவது பெரிய பிரச்சினையாக இருந்தது. `ஜியோமெட்ரி’ முறை தோன்றிய பிறகு அந்தப் பிரச்சினை தொடர்பான சிக்கல்கள் அகன்றுவிட்டன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜியோமெட்ரி முறையைக் கண்டறிந்து உலகத்துக்கு அறிமுகப்படுத்திய அறிஞர் பெயர் `யூக்லிட்’ ஆகும். ஆனால் அந்தக் கிரேக்க அறிஞரின் வாழ்க்கையைப் பற்றிய சரியான வரலாறு கிடைக்கவில்லை. அவர் எப்போது பிறந்தார், எப்போது மறைந்தார் என்ற தகவல்கள் கூடத் தெரியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் அவர் வாழ்ந்தார் என்ற தகவல் மட்டுமே கிடைத்திருக்கிறது.

யூக்லிட் எழுதிய `மூல தத்துவங்கள்’ என்ற நூல், கிரேக்க மொழியில் இருந்து உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நூல் 1570-ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூல், இன்றளவும் பெருஞ்செல்வாக்குப் பெற்றதாகத் திகழ்கிறது என்பதில் இருந்தே இதன் சிறப்புப் புரிகிறது அல்லவா? அந்த நூல்தான் `ஜியோமெட்ரி’ கணிதத்தின் அடிப்படையாகும்.

கிரேக்க நாட்டில் அலெக்சாண்ட்ரியா நகரத்தில் யூக்லிட் பிறந்தார் என்று கருதப்படுகிறது. அந்நகரில், எகிப்து ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற ஒரு பள்ளியில் கணிதவியலைப் போதித்து வந்தார் யூக்லிட்.

யூக்லிட் எழுதிய மூல தத்துவங்கள் நூல், உலகத்தில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக விற்பனையுடையதாக இருந்தது.

இன்றும் கூட, ஜியோமெட்ரி கணித முறை அடிப்படையில்தான் கடலில் கப்பல்களைச் செலுத்துகிறார்கள். ஆகாயத்தில் விமானம் தடம் மாறிச் செல்லாமல் நேர்வழியில் செல்லவும் இந்த கணித முறையே உதவுகிறது.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

No comments: