Monday, May 16, 2011

அரசியின் கொட்டாவி

(தெனாலி ராமன் கதைகள்)

திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.

அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள்.

தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான்.

ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான்.


மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான்.

மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார்.


"வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன்.

மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும்
எண்ணி மகிழ்ந்தார்.

பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.

பிறந்த நாள் பரிசு

(தெனாலி ராமன் கதைகள்)

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.


பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

புலவரை வென்ற தெனாலிராமன்

(தெனாலி ராமன் கதைகள்)

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.

யாரது... யாரது... யாரது..

படம் : காவலன்
பாடல் :
யாரது... யாரது...
இசை : வித்யா சாகர்
பாடியவர்கள் :
கார்த்திக், சுசீத்ரா
பாடலாசிரியர்:
யுகபாரதி
வெளியான ஆண்டு
: 2011



யாரது... யாரது... யாரது.. யார் யாரது..
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது

யாரது யாராது யாரது யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே -2
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மறந்திருக்கையிலும் அது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழல் என தொடர்வது புரிகிறதே
யாரும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய பிறகு
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மறுகையில் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்

யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது ...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது

அதிகாரம் - அடக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
கலைஞர் உரை:
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.
மு.வ உரை:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

அதிகாரம் - அடக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
கலைஞர் உரை:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
மு.வ உரை:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

அதிகாரம் - அடக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 128:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
கலைஞர் உரை:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
மு.வ உரை:
தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.